Friday, January 25, 2008

அஹிம்சை..



காந்தியை கொன்றவனை

கொன்றனர் -உடன்

காந்தியையும்...

Read More......

Thursday, January 10, 2008

கமல்- அல் அக்ஸா(Al-Aksha) கதை
















அல் அக்ஸா மசூதி இரண்டாயிரம் ஆண்டுகளாய்
ஆண்டவன் பெயரால் கோடி பேர் செத்த தலம்,
ஏசுபிரான் சிலுவையில் உயிர் நீத்த அதே இடம்,
நபிகள் சொர்க்கம் ஏகுமுன் மிதித்த கடைசிப் படி,
முன்பு ஆப்ரஹாம் பெற்ற பிள்ளையையே பலி தந்த பீடம்,
பின்பு அதுவே பக்ரீத் பண்டிகையாய் துளிர்த்த பாறை,
நேற்றென் பாலஸ்தீனத் தம்பிமார்கள் யூதத் தமையனாருடன் மோதக்
காரணமான மேடு,இன்று ரஷ்யாவும் அமெரிக்கவும் தம் ஊழாயுதங்கள் தீட்டும் சாணைக் கல்,ஆயிரம் ஆண்டுகட்கு முன் இதே அக்ஸாவை ரத்தக்குட்டையாக்கி ஐரோப்பிய பிரபு ஒருவன் செங்குருசுக் கொடி நட்ட தரை, நாளை நாங்கள் நடவிருக்கும் அமைதிக் கொடி நல்ல காற்றில் பறக்கப் பொகும்
சிகரம், இத்தனைக்கும் ஒரே இடத்தைத் தேடித் தேர்ந்த ஆண்டவரையும்
ஆளப்பட்டோரையும் அடடா! என் வியப்பதன்றி வேறென்ன செய்ய..!

10-ம் நூற்றாண்டு...

ஐரோப்பா போப் கிரகோரியின் மறைவுக்குப் பிறகு காலியாகப்பொகும் நாற்காலியை நோக்கி நகர்ந்தார் பிரெஞ்சு கிறிஸ்துவ மதபோதகரான் அர்பான்.
டான்க்ரட்(Tancred) என்ற நார்மன் பிரபுவின் படை மற்றும் பண பலத்துடன் ரோமாபுரிக்குள் புகுந்து, ரோமபுரி - வாடிகன் அரசியலைத் தன்வசப்படுத்திக்கொண்டு,போப் பாண்டவர் இரண்டம் அர்பான் என்ற பட்டத்துடன் வாட்டிகனின் தலைமைப் பொறுப்பேற்றார்.


பெருநிலப் பிரபுக்களுக்கும் வாடிகனுக்கும் ஐரோப்பிய மக்களிடம் பணம் பறிப்பதில் பெரும் போட்டியும் பொறாமையும் நிலவியது.அரசு வருமனம், சர்ச் வருமனம் என்ற இரு மரத்துக் கனிகளாயிருந்த மக்கள் பணத்தை, ஒரே கல்லில் தன் கூடையில் விழச்செய்தார் கூர்மதியாளர் அர்பான்.அற்புத யுக்தியான் இந்த பொல்லத கல், சரியன தருணதில் எறியப்பட்டது.
டான்க்ரட் பிரபு பல ஊரைச் சூறையாடினாலும், நல்ல கிறிஸ்துவனாக இருக்க வேண்டும் என்ற ஓர் உறுத்தல் அவர் மனதில் இருந்தது.பைபிலில் சொல்லப்படும் ஒலுக்கங்கள் எதையும் மக்களிடம் பணம் பறிக்கும் தன் செயல்பாடுகல் பிரதிபலிக்கவில்லை என்பதை அவர் உன்ர்ந்திருந்தர். தினம் ஒரு கிராமத்தை மிரட்டிப் பணம் வாங்குவது அல்லது தர மறுத்த கிராமத்தைச் சூறையாடி மற்ற கிராமங்கள் பயப்படும் முன் உதாரணமக்குவது,கற்பழிப்பது, கொள்ளை அடிப்பது இவையெல்லம் அவருக்கு அலுப்பு தட்டி, கிட்டத்தட்ட அசோகச் சக்ரவர்த்தி மாதிரி நல்வழிப்பட்டுவிடும் 'அபாயம்' நெருங்கிக்கொண்டு இருந்த வேளையில்தான், போப் அர்பானுக்கு அற்புதமான ஓர் ஐடியா தோன்றியது. அந்த ஐடியா தான், இரு கனிகளை விழவைக்கும் ஒற்றைக் கல்.



'குருசுப் போர்' என் அறியப்படும் க்ரூசேட்(Crusade). தங்கள் தெய்வத்தின் பிறப்பிடமான ஜெருசலேம், இஸ்லாமியர் கைவசம்மிருக்கும் அவமாணத்தையும் அதைக் கைபற்ற வேண்டிய அவசியத்தையும் ஊர் ஊராக்ச் சென்று பல பொதுக்கூட்டங்களில் பேசி உசுப்பேற்றினார் அர்பான்.
வழக்கமான போருக்ககும் செலவுகளை வெகு லாகவமாக, இல்லாமல் செய்தார் போப் அர்பான். மறுபடியும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் (அல்லது ஆப்பிள்). குருசுக்கப் போராட ஜெருசலேம் செல்லும் வீரர்களுக்குச் சொர்க்கம் சேரும் உரிமமும், பாவ விமோசனமும் ஒருங்கே வழங்கினார் கிறிஸ்துவக் கடவுளின் ஒரே உலகப் பிரதிநிதியான போப் அர்பான்.
காசு பணத்துக்காக இல்லாமல் கடவுளுக்காகச் செய்யும் யுத்தம் தம்மைச் சொர்க்கம் கொண்டு சேர்க்கும் என்ப் பலரும் நம்பினர். முக்கியமாக, பிரபு டான்க்ரட் நம்பினார்.
பெரும் படை திரண்டது. போகிற வழியில் தங்கள் போர்த் திறனையும், வாள் கூர்மையையும், தாம் கடக்க நேர்ந்த ஐரோப்பியக் கிராமங்களிலேயே பரிசோதித்துப் பார்த்த்து அந்தப் படை.

யூதர்களைக் கண்ட இடத்தில் துண்டம் போட்டது.

ஏன்?

ஏசுநாதரைக் கொன்ற இன மாயிற்றே !

ஏசுநாதரே ஒரு யூதர்தான் என்பதை அர்பான் தலைமையில் இருந்த அன்றைய வாடிகன், யாருக்கும் விளக்க முற்படவில்லை (1967-ல் தான் வாடிகன்,ஏசுநாதர் ஒரு யூதர் என்பதை ஒப்புக்கொண்டது).
சரி,கதைக்கு வருவோம். இப்படி துவங்கிய Crusade, ஜெருசலேம் செல்லும் வழியில், கடவுளின் பெயரால் நடத்திய கொலைகள் பல்லாயிரம்..! இவர்கள் தரப்பிலும் சேதம் இல்லமல் இல்லை. ஆனால், உயிர்ச் சேதத்தைச் சரிக்கட்டும் அளவுக்குப் பொன்னும் பொருளும் அழகான் அரேபியப் பெண்களைக் கற்பழிக்கும் வாய்ப்பும் கிட்டியது.




பைபிள் சொன்ன ஒழுக்கங்களுக்கு போர்க்கலத்தில் விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, போரும் உடலுறவும் முடிந்தவுடன், கூடவே வந்திருந்த பாதிரிகளிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக்கொண்டு புனிதர்களாக மாறினர் டான்க்ரட்டின் வீரர்கள்.
ஜெருசலேமில் 461 ஆண்டுகளாக இஸ்லாமியருடன் உடன்படிக்கை செய்துகொண்டு, ஏசு மரித்த இடத்தையும்,வாழ்ந்த இடங்களையும் வணங்கி வழிபட்டு வாழ்ந்து வந்தது சிறுபன் மைக் கிறிஸ்துவர் கூட்டம் ஒன்று. சிரியா, ஜெருசலேம்...முக்கியமாக பெத்லஹெமில் அமைதியக வழ்ந்து வந்த இந்தக் கிறுஸ்துவர்களின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக்கியது முதல் குருசுப் போர்.


அதிநவீன் ஐரோப்பியக் கிறிஸ்துவ வெறியர்கள் நிகழ்த்திய கொடூரங்கள், ஜெருசலேம் வாழ் கிறிஸ்துவர்களை சிதறி ஓடச் செய்தது. இந்நிலையில் டான்க்ரட், ஜெருசலேம் நகரையே ரத்தக் காடாக்கி, அந்நகரைக் கைப்பற்றினார்.
அங்கு எஞ்சிய இஸ்லலாமியப் பெரியோருக்கும் அரபுப் பண்டிதர்களுக்கும் அடைக்கலம் தந்து ஒண்டும் இடமாக அல் அக்ஸா மசூதியை ஒதுக்கி, தன் செஞ்சிலுவைக் கொடியைப் பறக்கவிட்டார் (இன்று நாம் காணும் செஞ்சிலுவையிலிருந்து வெகுவாக வேறுபட்டது டான்க்ரட்டின் செஞ்சிலுவை.

இஸ்லமியர் அங்கு மசூதி கட்டி வசிக்கக் காரணம்?

அது ஆப்ரஹாம் தன் மகனை பலி தந்த பாறை என்று இஸ்லாமியர் திண்ணமாக நம்பினர் ! ஆனால், போர் வெறியில் இருந்த குருசுப் போர் பக்தர்களுக்கோ, இஸ்லாமியருக்கு டான்க்ரட் காட்டிய கனிவும் கருணையும் இடைஞ்சலாக இருந்தன. இத்தனை நாள் தாங்கள் புனித பூமியை மாசுபடுத்திய இஸ்லாமியர்கள் மசூதி கட்டிப் பெரு வாழ்வு வாழ்வதா?என்ச் சினந்து, மசூதியில் பதுங்கி இருந்த பெரியவர், பெண்டிர், பிள்ளைகள் எனப் பாரபட்சமின்றி தலைகளைக் கொய்தும், குடலை உருவிப் போட்டும் ஊழிக் கூத்தாடினார்கள். அன்று, கோபத்தில் துவங்கிய இஸ்லாமியரின் புனிதப் போரும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் தொடர்கிறது


1940-கலில் ஹிட்லர் யூதர்களைச் சூறையாடியபோது, அகதிகளான பல லட்சம் யூதர்கள் தங்கள் புராதன் பூமியான ஜெருசலேம் செல்ல முடிவு செய்தனர்.கனன்றுகொண்டு இருந்த ஜெருசலேம் அரசியலில் எண்ணெய் ஊற்றியது இச்சயல். இடம்பெயர்ந்த யூதர்களால் தடம் புரண்டது நவீன் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை. தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் வாழ வேண்டிய நிலையில், கடந்த 50 வருடங்களாக் பாலஸ்தீனியர்கள் போராடி வருகிறர்கள்.வழக்குகு வந்தா ஆப்பத்தைப் பிட்டு பிட்டுத் தின்றதன் விளைவு, இன்று ஒரு நாடே அகதிகள் முகாமில் வசித்துப் போராடி வருகிறது. மூன்று வாரம் முன்பு கூட யூதர்கள் தங்கள் ஓலச் சுவரைச் (Wailing Wall) செப்பனிடும் திட்டம் என்ற பெயரில் துவங்கிய கட்டடப் பணிகல், தங்கள் அல் அக்ஸா மசூதியை நிலை குலைந்து இடியச் செய்யும் சதி என்று குரலெழுப்பியது பாலஸ்தீனம் !
சிறு போர் ஒன்றும் வெடித்தது. இதை எழுதி முடிப்பதற்குள் குறைந்தது 100 பேராவது செத்திருப்பார்கள். கிட்டத்தட்ட நமது ராமர் கோயில் - பாபர் மசூதி போன்ற சிக்கல்தான் அதுவும். இப்பப் புரியுதா?


-அன்புடன்,
கமல்ஹாசன்

Read More......

உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்...



உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்

நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே

அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.

எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,

எவ்வழி எனத் தெரியாமலே எமை நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.

இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.

அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு.

எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.

வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்

ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.

அப்போது தென்படுமே வெவ்வேறு பாதைகள்!அவற்றில், எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது உனக்கும் தெரியாது.

நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம், விபத்தல்ல.

யாமதை அமைத்ததே அப்படி.

நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,யாம் வடித்த பீடமது.

உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.

தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.

நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி, இது எமது நாயகம்.

இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;

மாறும், ஏதேனும் ஒரு விபத்தின்


நன்றி- கமல்ஹாசன் - ஆனந்த விகடன்

Read More......

Saturday, January 5, 2008

தாயே, என் தாயே!


தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்

Read More......